name='description'/> தமிழ்க்கனி: இலக்கியக் காட்சி
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !
இலக்கியக் காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியக் காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கெண்டை மீனும் கொக்கும் !

#தாமரையும், #சைவக்கொக்கும் !


"கொக்கு ! சைவக்கொக்கு !  - ஒரு கெண்டைமீனக் கண்டு

விரதம் முடிச்சிருச்சாம்" ஒரு திரைப்படப் பாடல் இது !


"ஓடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"

என்கிறது, ஒளவையின் மூதுரை ! (16)


"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து. (490)" இது #பேராசான் வாக்கு !


கொக்கும் மீனும் ஒன்றை ஒன்று ஏய்த்து வாழும் 

தன்மையதாய் இருந்தன என்று அறிகிறோம். இது குறித்து ஒரு 

சுவையான சங்கப் பாடல் ஒன்றைக் காண நேர்ந்தது !

பகிர்ந்து  கொள்கிறேன் !


கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது

அதற்காகவே காத்திருந்த கொக்கு கெண்டைமீனைக் 

கவ்வியது. எதிர்பாராதவிதமாகக் கொக்கின் கவ்வுதலிலிருந்து 

தப்பியது மீன் !


உயிர்பிழைத்த மீன் அச்ச உணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது.

நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் வெண்தாமரைமலரைக் 

கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது 

போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு 

தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது!


மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் வகையில்,

#குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. மேலும், இந்த கொக்கு 

- மீன் எடுத்துக்காட்டு மூலம் ஓர் அழகான அகவாழ்வியல்

நிகழ்வையும் உணர்த்துகிறது அப்பாடல் !


பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் , ஊடல் கொண்டிருந்த

தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் 

தான்  பின்நின்றான்.பாணனைக் கண்ட தோழி

தலைவியின் சார்பாகஅவனைநோக்கி, “நின் பாணன்

பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே

எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி "#வாயில்_மறுத்தாள்"


"வாயில் மறுத்தல்"என்பது அகத்துறைகளுள் ஒன்றுதலைவன் 

பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடிஅவன் தவற்றை 

அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர

அனுமதி மறுப்பாள் தலைவி. இதற்கு வாயில் மறுத்தல் என்று 

பெயர் !

இனி .....

அந்தக் குறுந்தொகைப்

பாடலைப் பார்ப்போம்.


குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே !


(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)

தோழி கூற்று (மருதம் - ஊடல்)


அதாவது.......

குருகிற்கு (கொக்கிற்கு) அஞ்சிய கெண்டை அக்குருகைப் 

போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை 

இல்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு

அஞ்சினாற்போல,,,,,,,,


நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த

மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனர்  

என்பது குறிப்பு !


இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன்

தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக

நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது !


பாடல்வழி அறியலாகும் கருத்து:-


கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் 

பேதமை நிமித்தம் சிரிப்பை  (நகை) தோற்றுவிப்பதாக  

உள்ளது.  கொக்கிடம்  மீண்ட கெண்டைமீன் தாமரையைக் 

கண்டு கொக்கோ என்று அஞ்சுவதுபோலவே,  

தலைவனுக்காகப்  பொய்சொல்லும் பாணரைக் கண்ட 

மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள்

என்று எண்ணுவதாகப் புலவர்கள் கூறுவதுஆகியன  ஒப்பு 

நோக்கி இன்புறத்தக்கன ! 


மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத 

மீனைப்போன்றஉயிரினங்களின்  மனவுணர்வையும்  

நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப் 

புலவர்களின் உளவியல் அறிவு 

வியக்கத்தக்கதாக உள்ளது.  இது ஒரு புறம் இருக்க........

அரசியல் உலகில்

#தாமரையானதுசைவக் கொக்கு வேடம் பூண்டுஅப்பாவி 

மீன்களைக் கொத்தித் தின்றுவிட எல்லா வகையான

முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது !


அப்பாவி மீன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த 

சைவக் கொக்குத் தாமரையை வாடி வதக்கி மண்ணோடு 

மண்ணாக்கிட வேண்டும் !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்,

துலக்கோல் முகநூல்.

[தி.பி.2052,மேழம் (சித்திரை) 05]

{18-04-2021}

-------------------------------------------------------------------------------------------------------------


சனி, 17 ஏப்ரல், 2021

வான்குருவியின் கூடு, வல்லரக்கு, தொல்கறையான் !

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு !

-----------------------------------------------------------------------------------------------------------------

ஒளவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகிய புலவர் பெருமக்கள் சமகாலத்தவர்கள் என்றும், , , , ,

சோழமன்னன் குலோத்துங்கனின் அரசவையில் அங்கம் வகித்தவர்கள் என்றும் நம்பப் படுகிறது !


ஆனால், கல்வியில் பெரியவர்.

கம்பனே என்றும்,

#இராமகாதை எனும் மகா காவியம் படைத்த சிறப்பிற்குரியவர் என்றும்,,,,

கம்பனுக்கு நிகரான புலவர் எவரும் இல்லை என்றும்,,,,,

தன்னுடைய அரசவையில் கம்பனைப் புகழ்ந்து பேசினான் #சோழமன்னன்.

அவையில் இருந்த #ஒளவை_மூதாட்டி இதை ஏற்கவில்லை !


"பெரிய பெரிய காவியங்கள் படைப்பதுதான் புலமைக்கு அளவுகோல் என்று கூறுவது தவறு.

"அவரவர்க்கு எவை எவை எளிதோ அதை அவர்கள் செய்வார்கள்.

"எல்லார்க்கும் ஒவ்வொரு செயல் புரிவது எளிது!

ஆகவே, கம்பரை வானளாவப் புகழ்வது ஏற்புடையதன்று"

என்றார் ஒளவை மூதாட்டி !


இது அளவயில் இருந்த சோழஅரசன், கம்பர் ஆகியோரை சினம் கொள்ளச் செய்தது.

இதைக் குறிப்பால் உணர்ந்த ஒளவை மூதாட்டி ,

"கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

என்று

உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள் - மெத்த

வெறும் பந்தயம் கூற வேண்டாம் புலவீர்

எறும்பும் தன் கையால் எண்சான் "

என்றார் ஒளவை மூதாட்டி .


ஒளவையார் பாடிய பாட்டும், பேசிய பேச்சும் சோழனுக்கு பெரும் வருத்தத்தினைத் தந்தது.

கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண் டிருந்தவன் சோழன்.

தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு வெகுண்டான், கலங்கினான்.


ஆனால் , பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடப்படும் ஒளவையார்,

அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

"கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும்.


அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?" என்றான் சோழன்.

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஒளவையார் பெருங்காவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது.

அமைதியுடன் அதனைச் செவிமடுத்த ஒளவையார்.

"சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதனைப்போல எவராலாவது ஒரு கூடு கட்ட முடியுமா? குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?


பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது !

தேனீக்கள் கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?

இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவை தான் தொழில் நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ?


அததற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

அதனைப்

போலவேதான் கவிதையும்.

ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும்.

கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால்,,,,

வெண்பாவில் #புகழேந்தியார் புலியைப்போல் இருக்கிறார்,,,,,

கோவை, உலா அந்தாதியில் நம் #ஒட்டக்கூத்தர் மகாவல்லவர்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் வல்லவர்களாக உள்ளனர்.


நான் பெருங்காவியம் எதுவும் பாடவில்லை.

ஆனல், என்னுடைய சிறு சிறு அற நூல்களைக் காலங்கடந்தும், ஒவ்வொரு சிறாரும் கற்பர் பயனடைவர்.

இலக்கண இலக்கியங் கற்றோரே, கம்பன் கவியில் திளைக்க இயலும்,,,,


அந்தந்தத் துறையில் உள்ள வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

"அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது.

அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு.


ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும்.

இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு.

பாராட்டுவதுதான் அரசர்க்கு அழகுஎன்றார்.


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


"தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது விளக்கினார் மூதாட்டி, ஒளவையார்


ஒளவையாரின் பாடற்கருத்தினைக் கேட்ட, அறங்கூர் புலவர் அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் அதனை மறுக்க முடியவில்லை.

தான் கம்பர் மீது வளர்த்துக் கொண்ட அளவற்ற அன்புதான், அவரை அளவுக்கு மீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான்.


அதனால் புலவர்கள் பலர் புண்பட்டிருப்பர் என்பதனையும், தன் மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்க வேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.

ஆனால், அச்சமின்றி அதனை எடுத்துரைத்துத் தன்னைத்


தெளிவுபெறச் செய்த ஒளவை முதாட்டியை வணங்கி அவருக்குச் சிறப்புச் செய்தான் சோழமன்னன்.

(இது வரலாற்று நிகழ்வன்று.கற்பனை மிகுந்த புனைவு. சுவை கூட்டிப் பதிவு செய்துள்ளேன்.

சுவைப்பதும், விமர்சிப்பதும் உங்கள் உரிமை)

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்.

{11-04-2021}

 ------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 29 ஜனவரி, 2021

இளம் புலவர் ஒட்டக்கூத்தர் !

 

துரோபதையை மூக்கரிந்ததல்லவா மாபாரதம் !

 ♦️♦️♦️♦️♦️

காலம் 10 ஆம் நூற்றாண்டு.


மன்னர் #விக்கிரமசோழர் அரசவை.


அரசர் ஒரு வரியைக்கூறுகிறார் :


வாலி திரௌபதையை 

மூக்கரிந்ததல்லவோ மாபாரதம்*"

இது தவறல்ல; உண்மைப் 

பொருள்தரும் வரிதான் !

ஆகவே புலவர் கூட்டம் 

இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் அது எப்படி சரி 

என்று விளக்க வேண்டும் ! "


புலவர் கூட்டம் திகைத்து நின்றது !.


ஓர் இளைஞர் எழுந்துநின்றார்.


" அரசர் பெருமானே , 

புலவர் பெருமக்களே 

வணங்குகிறேன் !


"அரசர் பெருமான் கூற்று 

உண்மைதான்” என்று

ஒரு வெண்பாவைக் கூறினார் 

இளம் புலவர் !


"புள்ளிருக்கும் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்

சுள்ளிருக்கும் கள்ளையுண்டும் சோர்விலேம் - உள்ளபடி

சொல்லவா வாலிது ரோபதையை மூக்கரிந்த

தல்லவா மாபா ரதம்?''


இதைக்கேட்ட மன்னர் 

விக்கிரம சோழன்

பெருமகிழ்ச்சியடைந்தார் !


"நன்று புலவரே. நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் இங்குள்ள பிற புலவர் பெருமக்கள்

பொருள் புரியமல் திகைத்து நிற்கின்றனர்.

அவரகளுக்கு விளக்குங்கள்" என்றார்.


இளம்புலவர் விளக்கினார் !


"*சிற்றிலக்கிய வகைகளில் 

"கலம்பகம்"

என்பதும் ஒன்று.

கலம்பகத்தின் ஒரு கூறு "களி".


கற்றறிந்தவர்கள் கள்ளைக் 

குடித்து மயங்கினாலும் , 

தம்முடைய புலமைச்

செருக்கை இழக்க 

மாட்டார்கள் !


ஆனால், சில நிகழ்வுகளைக் 

கேட்பவர் மயக்குறும் வகையில் வெளிப்படுத்துவார்கள் !


"அந்த வகையில் அமைந்ததுதான் 

நான்கூறிய வெண்பா”.


"இதில்  மன்னர் இயம்பிய கடைசி

வரியில் கூறப்பட்ட செய்தி நிகழ்ந்த

நேர்வை விரித்துக் கூறியுள்ளேன்."

என்றார் இளம்புலவர் !


"சரி உம் வெண்பாவின்

பொருளை விளக்கமாகக் கூறுங்கள்"

என்றார் மன்னர் !


இளம்புலவர் தொடர்ந்தார் !


"வாலி என்பது வால்த்தனம் மிக்க

#துச்சாதனனைக் குறிக்கும்.


"#மூக்கரிதல் என்பது 

திரௌபதியைத் துகிலுரிந்து அவமானப்படுத்தியதைக் 

குறிக்கின்ற பொருள்தரும்.

இந்நிகழ்வு #மகாபாரதத்தில் நிகழ்ந்தது !


"ஆனால் வாலி என்ற பாத்திரமும்,

சூர்பனகையின் "மூக்கரிதல்" என்கிற 

நிகழ்வும் #இராமாயணம் 

கூறும் செய்தி !


"இப்படிச் சிற்றிலக்கிய வகையில் ஓர்

உறுப்பான "கலம்பகத்தில் களி"க்கு 

ஏற்றவகையில் பொருள் மயக்கம் 

தரும்வகையில் கவிபாடுவது கள்குடித்த  

புலமைமிக்கோருக்குக் 

கைவந்த கலை !


"கள்ளைக் குடித்தாலும் தங்களின

புலமையை இழக்காதவர்களாகப்

புலவர் கூட்டம் இருப்பதை 

வெளிப்படுத்தும் செய்தியைத்தான் 

நான் இவ்வெண்பாவில்

கூறியுள்ளேன்." என்றார் இளம் புலவர் !


இதனைக் கேட்ட அரசன் உள்ளிட்ட 

அவையோர் பெருவியப்பில் 

ஆழ்ந்து மகிழ்ச்சி பொங்கப்

பாராட்டினர் !


மன்னர் விக்கிரமசோழர்

"புலவரே ! இன்று முதல்

தாங்கள்தான் இப்புலவர் 

கூட்டத்தின் முதன்மைப்

புலவர் ” !


”என் அரசவையின் அவைக்களப்

 புலவராகவும் அரச பரம்பரைக்கு 

நீங்களே கல்வி

போதிக்கும் #ஆசானும் ஆக 

இருக்க வேண்டும்” 

என்று கூறி வரவேற்றார் !


அந்தப் புலவர்தான் #கவிச்சக்கரவர்த்தி ,

#கௌடப்புலவர், #கவிராட்சசன் என்று

அறியப்பெற்ற #ஒட்டக்கூத்தர் பெருமான்.

   ♦️♦️♦️♦️♦️

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

சோம.நடராசன்,
[somanatarajan17@gmail.com]
ஆட்சியர்,
துலாக்கோல் முகநூல்
{தி.பி.2052,சுறவம்(தை) 29}
29-01-2021
-------------------------------------------------------------------------------------------------------------