name='description'/> தமிழ்க்கனி: வான்குருவியின் கூடு, வல்லரக்கு, தொல்கறையான் !
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

சனி, 17 ஏப்ரல், 2021

வான்குருவியின் கூடு, வல்லரக்கு, தொல்கறையான் !

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு !

-----------------------------------------------------------------------------------------------------------------

ஒளவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகிய புலவர் பெருமக்கள் சமகாலத்தவர்கள் என்றும், , , , ,

சோழமன்னன் குலோத்துங்கனின் அரசவையில் அங்கம் வகித்தவர்கள் என்றும் நம்பப் படுகிறது !


ஆனால், கல்வியில் பெரியவர்.

கம்பனே என்றும்,

#இராமகாதை எனும் மகா காவியம் படைத்த சிறப்பிற்குரியவர் என்றும்,,,,

கம்பனுக்கு நிகரான புலவர் எவரும் இல்லை என்றும்,,,,,

தன்னுடைய அரசவையில் கம்பனைப் புகழ்ந்து பேசினான் #சோழமன்னன்.

அவையில் இருந்த #ஒளவை_மூதாட்டி இதை ஏற்கவில்லை !


"பெரிய பெரிய காவியங்கள் படைப்பதுதான் புலமைக்கு அளவுகோல் என்று கூறுவது தவறு.

"அவரவர்க்கு எவை எவை எளிதோ அதை அவர்கள் செய்வார்கள்.

"எல்லார்க்கும் ஒவ்வொரு செயல் புரிவது எளிது!

ஆகவே, கம்பரை வானளாவப் புகழ்வது ஏற்புடையதன்று"

என்றார் ஒளவை மூதாட்டி !


இது அளவயில் இருந்த சோழஅரசன், கம்பர் ஆகியோரை சினம் கொள்ளச் செய்தது.

இதைக் குறிப்பால் உணர்ந்த ஒளவை மூதாட்டி ,

"கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

என்று

உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள் - மெத்த

வெறும் பந்தயம் கூற வேண்டாம் புலவீர்

எறும்பும் தன் கையால் எண்சான் "

என்றார் ஒளவை மூதாட்டி .


ஒளவையார் பாடிய பாட்டும், பேசிய பேச்சும் சோழனுக்கு பெரும் வருத்தத்தினைத் தந்தது.

கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண் டிருந்தவன் சோழன்.

தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு வெகுண்டான், கலங்கினான்.


ஆனால் , பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடப்படும் ஒளவையார்,

அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

"கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும்.


அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?" என்றான் சோழன்.

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஒளவையார் பெருங்காவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது.

அமைதியுடன் அதனைச் செவிமடுத்த ஒளவையார்.

"சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதனைப்போல எவராலாவது ஒரு கூடு கட்ட முடியுமா? குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?


பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது !

தேனீக்கள் கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?

இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவை தான் தொழில் நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ?


அததற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

அதனைப்

போலவேதான் கவிதையும்.

ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும்.

கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால்,,,,

வெண்பாவில் #புகழேந்தியார் புலியைப்போல் இருக்கிறார்,,,,,

கோவை, உலா அந்தாதியில் நம் #ஒட்டக்கூத்தர் மகாவல்லவர்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் வல்லவர்களாக உள்ளனர்.


நான் பெருங்காவியம் எதுவும் பாடவில்லை.

ஆனல், என்னுடைய சிறு சிறு அற நூல்களைக் காலங்கடந்தும், ஒவ்வொரு சிறாரும் கற்பர் பயனடைவர்.

இலக்கண இலக்கியங் கற்றோரே, கம்பன் கவியில் திளைக்க இயலும்,,,,


அந்தந்தத் துறையில் உள்ள வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

"அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது.

அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு.


ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும்.

இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு.

பாராட்டுவதுதான் அரசர்க்கு அழகுஎன்றார்.


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


"தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது விளக்கினார் மூதாட்டி, ஒளவையார்


ஒளவையாரின் பாடற்கருத்தினைக் கேட்ட, அறங்கூர் புலவர் அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் அதனை மறுக்க முடியவில்லை.

தான் கம்பர் மீது வளர்த்துக் கொண்ட அளவற்ற அன்புதான், அவரை அளவுக்கு மீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான்.


அதனால் புலவர்கள் பலர் புண்பட்டிருப்பர் என்பதனையும், தன் மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்க வேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.

ஆனால், அச்சமின்றி அதனை எடுத்துரைத்துத் தன்னைத்


தெளிவுபெறச் செய்த ஒளவை முதாட்டியை வணங்கி அவருக்குச் சிறப்புச் செய்தான் சோழமன்னன்.

(இது வரலாற்று நிகழ்வன்று.கற்பனை மிகுந்த புனைவு. சுவை கூட்டிப் பதிவு செய்துள்ளேன்.

சுவைப்பதும், விமர்சிப்பதும் உங்கள் உரிமை)

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


சோம.நடராசன்,

[somanatarajan17@gmail.com]

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்.

{11-04-2021}

 ------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக